Wednesday, March 11, 2020

வெள்ளியங்கிரி மலை தரிசனம்

வெள்ளியங்கிரி மலை பயணம் நீண்ட நாள் ஆவல் .நாம் பார்த்திராத இந்த மலையை சென்று ,பார்த்திட வேண்டும் என கடந்த மகா சிவராத்திரி 2020 அன்று கோயம்புத்தூர் சென்றேன் .
தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை  கோயம்புத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.  கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து பூண்டி மலையடிவாரத்திலுள்ள இடத்திற்கு சென்றால் அங்கிருந்து மலை ஏற ஆரம்பிக்கலாம்.

அருகில் ஈசா யோகா மையம் உள்ளது. பூண்டி மலை அடிவாரத்திலுள்ள பூண்டி விநாயகர் வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்பாள்,  ஆகிய சன்னதிகள் கிழக்கு நோக்கி அழகாக அமைந்துள்ளது.சுமார் ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலைப்பாதையில் நடந்தே செல்ல வேண்டிய மலைக்கோயில் ஆகும்,
இதன் உயரம் சுமார் 6000 அடி ஆகும்.இப்பாதையில் செல்லும் இடத்தில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனைகைதட்டி சுனை சீதை வனம் அர்ஜுனன் வில்,பீமன் களி உருண்டை,ஆண்டி சுனை  திருநீர்மலை, ஒட்டன் சமாதிஆகிய பகுதிகளை கடந்து செல்ல வேண்டும் , மாசி மகா சிவராத்திரி யிலிருந்து சித்ரா பௌர்ணமி வரை இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நண்பர் ஒருவருடன் சிவராத்திரி பயணத்தை ஆரம்பித்தேன்,பூண்டி மலை அடிவார விநாயகர் தரிசனம் முடித்து ஆரம்பத்திலேயே வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது, மலை மேலே ஏறும்போது தீப்பெட்டி சிகரெட் எரியும் பொருட்கள் பயன்படுத்த மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அனுமதிக்கப்படுவதில்லை,பின்பு மலை ஏறினால் முதல் இரண்டு மலைகள் கல் படிக்கட்டுகளாக பயணிக்கிறது,
மிகுந்த சவால் விடும் அளவு செங்குத்தான பயணம்,இடையில் எலுமிச்சை உப்பு கலந்த பழச்சாறு ஆங்காங்கே விற்கிறார்கள். அதையும் கடந்து பயணித்து கொண்டே இருந்தால், இடையில் குளித்து விட்டு பயணிக்க அழகிய ஓடை உள்ளது, அங்குள்ள கோவிலை தரிசனம் செய்து பின் பயணித்தால் திருநீர்மலை வருகிறது,  அங்கு சில இடங்களை தோண்டி வைத்துள்ளார்கள்,அதில் சுத்தமான வெள்ளை நிறமுடைய திருநீர் மாதிரியான மண் கிடைக்கிறது.
மதியம் இரண்டரை மணிக்கு ஆரம்பித்த பயணம் மாலை 6 மணியளவில் திருநீர்மலையில் ஒரு சுக்கு காப்பி கடையில் ஒரு சுக்கு காப்பியும், தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு பயணித்தோம், இரவு 8 மணி வரையில் நடந்து கோவிலை அடைந்தோம், முதல் நான்கு மலையில் வேர்த்துப் போன உடம்பு கடைசி மூன்று மலை வெகுவாக குளிரத் தொடங்கியது இரவு  எட்டு மணிக்கு சுமார் ஆறு மணி நேர பயணத்திற்கு பின் ஏழாவது மலையான வெள்ளிங்கிரியை அடைந்தோம், நாங்கள் சென்ற நேரத்தில் அதிக கூட்டமில்லை, சுவாமி சுயம்புலிங்கமாக சிறிய லிங்கமாக காட்சி அளிக்கிறார்,


அருமையானதொரு தரிசனம் , மிக நீண்ட நாளைய ஆசை இந்த சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று , அது நிறைவும் செய்தாகிவிட்டது,உங்களுக்கு 45 வயதுக்குள்  இருந்தால் ,மலையேற்றத்தில் ஆர்வமாக இருந்தால், சிவ வழிபாட்டில் ஆர்வமாக இருந்தால் கண்டிப்பாக வாழ்நாளில் ஒரு தடவையேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம், செல்லும் போது மறவாமல் 2 லிட்டர் தண்ணீர்,மூன்று வேளை உணவு,குளிருக்கு ஏதாவது ஒரு போர்வை ,  குளுக்கோஸ், டார்ச் லைட் மற்றும்சிற் சில உணவு வகைகளை எடுத்துச் செல்வது இந்த பயணத்திற்கு நல்லது,  இந்தக் கோவிலில் மகா சிவராத்திரியும் சித்திரா பௌர்ணமியும் மிக விசேஷமாகும் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.  வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் மிகுந்த கவனத்துடன் நடக்க வேண்டிய மலை, ரத்த அழுத்தம் இதய பலவீனமானவர்கள், இந்த மலை ஏற முடியாது, 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் இந்தக் கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை ,










வெள்ளிமலை, ரசதகிரி,தென் கைலாயம்,பூலோகத்தின் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையை வாழ்நாளில் ஒரு முறையேனும் இரண்டு நாள் பயணமாக சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்,அற்புதமான ஒரு ஸ்தலம் , வாய்ப்பு கிடைத்தால் வணங்கிவிட்டு எழுதுங்கள், ஓம் சிவசிவ ஓம் - நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம், குரு.பழ.மாதேசு, குருவரெட்டியூர்-638504 www.kavithaimathesu.blogspot.com 

Thursday, September 5, 2019

மரம் வளர்ப்பு

மரம்.பரமானந்தம் # 6369944630 "பத்து ஏக்கரில் பல வகை மரங்கள்" வியக்கச்செய்யும் ஐயா! -------===================------------ "ஒரு மா மரத்தில், ஐந்து கிளைகளில் ஐந்து வகையான,சுவைகளில் வேறு வேறு மாம்பழங்கள் காய்க்கின்றன." கடலூர் மாவட்டம்,திருமுட்டம் (ஸ்ரீ முஷ்ணம்) அருகில் இருக்கிறது ஆதிவராக நல்லூர். ஊரில் நுழையும் போது புளியமரங்கள் அணி வகுத்து நிற்கிறது. ஐயா கோதண்டராமன், ஆதிவராக நல்லூர் இவர்கள் மகன் கோ.பரமானந்தம் அவர்கள் வளர்த்து வரும் மரங்கள் மிகச்சிறந்த வளர்ச்சியை எட்டி நிற்கின்றன. உள்நாட்டு மரங்கள் முதற்கொண்டு, ஒட்டுரக மரக்கன்றுகள் வரை பல மரங்கள் அடர்ந்த வனமாக காட்சியளிக்கிறது. தம் முன்னோர்கள் சாலையோரம் நட்டு வைத்திருக்கின்ற புளியமரங்கள் ஊர்மக்களுக்கு இன்றும் பலனளித்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக, இளைப்பாறிச் செல்லும் மக்கள் உதிர்க்கின்ற குளிர்வானச் சொற்களே,தம்மை களிப்பாக வைத்திருப்பதாக கூறுகிறார் எழுபது வயதில் இளமை மிடுக்குடன் இருக்கின்ற ஐயா பரமானந்தம் அவர்கள். சந்தனம், செம்மரம், பலா ,மா, புளி, நாவல் என பல வகை மரங்கள் வானுயர்ந்து நிற்கிறது. மூலிகைகள் வேலியோரம் படர்ந்து இருக்கிறது. மிளகு கொடி மரங்களைப்பற்றி சுற்றி காய்த்து நிற்கிறது. மரங்களின் மீது கொண்ட தீராத காதலால், போகும் இடமெல்லாம் கிடைக்கும் மர வகைகளை சேகரித்து வளர்த்து வருகிறார். முப்பது ஆண்டுகள் தொய்வில்லாத தேடல்,அரிய வகையான மரங்கள் அணி வகுத்து நிற்கிறது. பொது இடங்களில் மரங்கள் நட்டு பராமரிப்பும் செய்து வருகிறார்.தோட்டத்தில் விளையும் சாத்துக்குடி பழங்கள் கொண்டு இனிப்பு ஊறுகாய் தயாரிப்பது இவரது கண்டுபிடிப்பு. ஒரு மா மரத்தில், ஐந்து கிளைகளில் ஐந்து வகையான மாம்பழங்கள் காய்க்கின்றன. ஒட்டு கட்டி மரங்களை வளர்ப்பதில் கைதேர்ந்தவர். இவரின் மரங்கள் வளர்க்கும் ஆர்வம் அனைவரையும் மரங்களின் மீதான காதலை மேலும் தூண்டச் செய்கிறது. ஐயா பரமானந்தம் போன்றோரின் செயலால் பசுமை தழைக்கட்டும். மண் குளிரட்டும். ஆலோசனை பெற்று மரம் வளருங்கள், மரம் பரமானந்தம், -6369944630 ஆதிவராக நல்லூர், ஆதிவராக (ஸ்ரீ முஷ்ணம்), கடலூர் மாவட்டம்.

Monday, January 21, 2019

உயர்திரு . செந்தில் குமரன் , பட்டிமன்ற பேச்சாளர், தாரமங்கலம் , சேலம் (தமிழ் வளர்ப்போம்)

 இந்த 2019 வருடம் நமது குருவரெட்டியூர்
கக்குவாய் மாரியம்மன்  தை மாதம் கரிநாள் அன்று திரைப்படம், டெலிவிஷன் செல்போன், இவைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா ?என்ற பட்டிமன்றம் நடைபெற்றது , பட்டிமன்றங்கள் தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் அருமையான ஒரு நிகழ்ச்சி,, ஆர்வத்துடன் நானும் நண்பர்களை தொடர்பு கொண்டு யார் நடுவராக வரப்போகிறார் என்பதை ஆர்வத்துடன் விசாரிக்க தாரமங்கலத்தில் இருந்து செந்தில் குமரன் என்பவர் வருகிறார்..
அவசியம் நீங்களும் வாருங்கள் என நண்பர்கள் கூற நானும் ஆர்வத்துடன் கிளம்பினேன். நண்பர் செந்தில் குமரன் என்ற உடனே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குருவரெட்டியூர் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்தில் பேச்சாளராக இருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரங்களாக நிலையில்லாத வாழ்வைப்பற்றி நிலையாமை திருக்குறளை உதாரணம் காட்டியும், நல்ல நகைச்சுவையுடன் பேசக்கூடிய அவரின் ஞாபகம் வந்தது,
இன்று எப்படியும் பட்டிமன்றம் பார்த்து விட வேண்டும் என்று குருவரெட்டியூர் வந்துவிட்டேன். சரியாக இரவு 9 மணிக்கு பட்டிமன்றம் உயர்திரு. செந்தில் குமரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக துவங்கியது. நல்ல நகைச்சுவையான பேச்சு, திருக்குறளை மேற்கோள் காட்டும் மாண்பு,, அடுத்த தலைமுறையினரை சரியான வழிக்கு வழிகாட்டும் உரை, இப்படி ஐந்து மணி நேரம் எப்படி போனதென்றே தெரியலை,, இவருக்கு பல அங்கீகாரங்கள் கிடைத்துள்ளது.. உயர்திரு.. செந்தில்குமரன்
போன்ற சமூகத்திற்கு நல்வழி காட்டுகின்ற இந்தக் குழுவிற்கு மேலும் பல நல்ல வாய்ப்புகளை மக்கள் வழங்க வேண்டும். இதனால் சமூகம் நல்ல தெளிவு பெறும்., உயர்ந்த நிலைக்கு நல்ல சமூக சிந்தனையுடன் கூடிய இளைஞர்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம். பழனிக்கு அருகில் இருப்பவர்களுக்கு எப்படி அதன் அருமை எப்படி தெரியாதோ? அதைப்போல மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் நமக்கு அருகில் இருந்தும் இவ்வளவு நாள் அறியாமல் இருக்கிறோம்,   
திறமையானவர்களை தட்டிக் கொடுக்க வேண்டும், அவர்களை அங்கீகார படுத்த  வேண்டும் # வாழ்த்துக்கள் உயர்திரு. செந்தில்குமரன், வாழ்க நலமுடன் , நன்றி

Tuesday, October 16, 2018

அருள்மிகு மங்கம்மாள் மகாலட்சுமி திருக்கோவில், கத்திரி மலை

அருள்மிகு மங்கம்மாள் மகாலட்சுமி திருக்கோயில் ,கத்திரி மலை ,பர்கூர் அஞ்சல்,, அந்தியூர் வட்டம், ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்ட எல்லையில் அந்தியூர் வட்டத்தில், பர்கூர் பஞ்சாயத்தை சேர்ந்த கிராமத்தில் ஒன்று கத்திரி மலை ஆகும்.
இந்த கிராமம் வடக்கு கிழக்கு எல்லையில் சேலம் மாவட்டம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
கத்திரிமலையில் சோளகர் பழங்குடி இனத்தவர்கள் வசித்துவருகிறார்கள்..இவர்களின் பன்னெடுங்கால தெய்வமாக மங்கம்மாள் மகாலட்சுமி கோவில் இருந்து வருகிறது,
ஈரோடு மாவட்டம் ஆக இருந்த போதிலும் கோயிலுக்கு செல்ல சேலம் மாவட்டம், கொளத்தூரில் இருந்து சின்னதண்டா, தார்க்காடு, லக்கம்பட்டி அடிவாரம் வரை 15 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணித்தோம், அதன்பின் ஏழு கிலோமீட்டர் நடைபயணமாக சுமார் நாலு மணி நேரம் நடந்தது கத்திரி மலைக்கு செல்லலாம், கத்திரி பட்டி வழியாகவும் கத்திரி மலைக்கு நடந்து செல்லலாம்..
கடல் மட்டத்திலிருந்து 1050 மீட்டர் உயரத்தில் ஸ்ரீ மங்கம்மாள் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலுக்கு புரட்டாசி கடைசி வாரமும், சித்திரை மாதத்திலும் வருடத்தில் இரண்டு முறை வருடாந்திர பூஜை மிகச் சிறப்பாக நடைபெறும்
, இந்த கோவிலுக்கு மேட்டூர், கொளத்தூர், லக்கம்பட்டி கோவிந்தபாடி, சின்னதண்டா, மாதேஸ்வர மலை மற்றும் பூமி. பர்கூர் மலையை சேர்ந்த பல பக்தர்கள் இங்கே வந்து தரிசனம் செய்து வருகின்றனர்., கோவில் அமைப்பு : இந்த கோவில் மூலவராக மங்கம்மாள் மகாலட்சுமி அமைந்து உள்ளார்.
கோவில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது , மிக செங்குத்தான மலைப்பகுதி வயதானவர்கள் கோவிலுக்கு செல்வது எளிதல்ல,

புரட்டாசி மற்றும் சித்திரை மாதங்களில் மட்டுமே வருடாந்திர பூஜை காலங்கள் ஆகும், ஆகவே அந்த நாளில் செல்லலாம், மிகச் சிரமப்பட்டு மலையேறி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. கத்திரி மலையில் விழாக்காலங்களில் தவிர மற்ற நாட்களில் கடைகள் ஏதும் இல்லை ஆதலால் உங்களுக்கு தேவையான உணவு , தண்ணீர் பாட்டில் ,போர்வை, போன்ற அத்தியாவசிய தேவைகளை உடன் எடுத்துச் செல்லவும். மேலும் அப்பகுதியில் உள்ள நபர்கள் உதவியுடன் மலைக்குக்கு மேலே செல்லலாம் , வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்,,
இந்த ஊர் கோவில் பற்றி உதவ தெரிந்துகொள்ள தொலைபேசி எண் : ராஜா - 9445988698. கிரியன்- 9488404626, மற்றும் ஓர் புதிய கோயிலுடன் சந்திப்போம் .நன்றி.

Wednesday, October 10, 2018

ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் திருக்கோவில், பெருமுகை, கோபி வட்டம்

சமீபத்துல ஒரு அழகிய ஒரு பெருமாள் கோவில் தரிசனம் எனக்கு கிடைத்தது அதைப் பற்றி சொல்ல தான் இந்த பதிவு. இந்த திருக்கோயில் எங்கு இருக்குன்னா பெரு முகை கிராமம் கோபி வட்டம், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் சத்தியமங்கலம் to அத்தாணி செல்லும் வழியில் உள்ளது ,

அத்தாணியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் மலையடிவாரத்தில் உள்ளது. இந்தக் கோயிலோட அமைப்பு எப்படின்னு கேட்டீங்கன்னா மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய சூழலில் மலையடிவாரத்தில் இயற்கையாக ரம்மியமான அழகான ஒரு மலைக்குன்றில் அமைந்துள்ளது. இங்கு திருப்பதி திருமலை சீனிவாச பெருமாள் மற்றும் அருள்மிகு சஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.

இந்த கோவில் கடந்த 17. 8 .2018 தேதி வெள்ளிக்கிழமை ஆவணி ஒன்றாம் நாள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மிக அழகிய வேலைப்பாடுகளுடன் இவ்வளவு அழகான ஒரு பெருமாள் ஆலயம் காணக்கிடைப்பது அரிது, அவ்வகையில் இந்தத் திருக்கோவில் இப்பகுதியில் மிக பிரமாண்டமான அமைப்புடன் அமைந்துள்ளது.


கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் போது இந்த ஆலயத்தை சென்று அல்லது வழியில் பயணிக்கும் போது இந்த ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். பெருமாள் தரிசனம் மிக அழகாக திருப்பதி ஏழுமலையானை பார்ப்பது போன்ற ஒரு அழகிய அமைப்புடன் மிகுந்த வேலைப்பாடுடன் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலை தரிசனம் செய்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி

Monday, October 30, 2017

டெக்ஸ்வேலி TEX VALLEY

டெக்ஸ்வேலி  ( Tex Valley )                                                     அண்மையில் தீபாவளி பண்டிகைக்கு துணி எடுக்க செல்ல முடிவு செய்து எங்கே செல்வது என்று யோசித்த போது டெக்ஸ்வேலி சித்தோட்டில் இருக்கிறது அங்கு செல்லலாம் என நன்பர் கூற பயணித்தோம்
எங்கு உள்ளது? ஈரோட்டில் இருந்து 14 கி.மீ தொலைவில் சித்தோடு to கங்காபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. சேலம் to கோவை செல்லும் வழியில் சித்தோடு பை பாஸ் பிரிவு தாண்டி கங்காபுரத்தில் டெக்ஸ் வேலி அமைந்துள்ளது .
               
பயணித்து ஓர் வழியாய் டெக்ஸ்வேலி முகப்பு வந்ததாக விட்டது. கங்காபுரம் பைபாஸ் ரோடு மெதுவாக கடந்து வர வேண்டும்' இந்த பகுதிக்கு வந்தவுடன் நாம் ஏதோ வெளிநாட்டில் உள்ளது போல ஓர் உணர்வு , டெக்ஸ்வேலியின் முகப்பே அழகான வடிவமைப்பு கடந்து உள்ளே சென்றால் வலப்புறம் வாரச்சந்தை விற்பனை கூடம் கிட்டத்தட்ட 200 கடைகள் இவைகள் எளிமையான விலையில் துணிகள் விற்பனைக்கு உள்ளது. இதை தாண்டி பயணித்தால் மிகப் பெரிய கட்டிடம் நம்மை வரவேற்கிறது

 சுமார் 18 ஏக்கர் பரப்பில் 16 லட்சம் சதுர அடியில் சுமார் 450 கோடி மதிப்பீட்டில் 1650 கடைகள் பிரமாண்டமான 3 கட்டிடங்களில் உயர்ந்து நிற்கிறது. இங்கு கர்சீப் முதல் நமக்கு தேவையான அனைத்து துணிகளும் வாங்கலாம். இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக வளாகம், இங்கு பல ஆயத்த ஆடை நிறுவனங்கள் தங்கள் ஷோருமை திறந்துள்ளனர் .  

எல்லா தரப்பு மக்களும் வந்து துணிகள் வாங்கும் அளவிலேயே விலைகளும் உள்ளது. ஒரு நாள் வந்து பாருங்கள்.  சர்வதேச தரத்திற்கான ஓர் முயற்சி இதன் கட்டிடங்கள் அமைப்பு, அழகு ,                                                        டெக்ஸ் வேலியை உருவாக்கிய நல் உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள்         

Tuesday, October 24, 2017

மனம் கவர்ந்த பாடகி -பிரியங்கா


விஜய்டி.வி சூப்பர்சிங்கர்பிரியங்கா                                    :    - -                                                                                                                             கடந்த சில நாட்களுக்கு பேஸ்புக்கில் எனது நண்பர் பதிவிட்டு இருந்த ஒரு வீடியோவை ரசித்தேன். விஜய் டி.வி சூப்பர் சிங்கர் பைனலில் பாடிய பாடல் அது.' " சின்ன சின்ன வண்ணக் குயில் " என துவங்கிய அந்த பாடல் கேட்டு மெய் மறந்த தருணம் அது, அட என்ன ஓர் அழகான குரல்.                                                                            " -                                  ஜென்சி, ஜானகி, அவர்கள் குரலை ரசித்து கொண்டிருந்த எனக்கு பிரியங்காவின் பாடல் கேட்ட போது இவர் நல்ல நிலைக்கு வருவார் என தோன்றுகிறது,.                                                                                          தனது உழைப்பால் தற்போது ஒரிரு சினிமா பாடல்கள் பாடி வரும் இவருக்கு தமிழ் திரையுலகம் இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும்' என்பது என் ஆவல் , மீண்டும் ஒரு ஜென்சி, ஜானகி வரிசையில் பிரியங்கா குரல் .                                                                                      பிரியங்கா மேன் மேலும் பல படங்களில் பாடி  நல்ல நிலைக்கு வர வேண்டும் அதுவே நம் ஆவலும் எம் வலைப்பூவில் இவரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன் # வாழ்த்துக்கள் ப்ரியங்கா
     







பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...